காதல் பிரச்சினையால் தூக்கில் தொங்கி இளைஞர் தற்கொலை! – மட்டக்களப்பில் சோகம்
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது எனக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தாளங்குடாவைச் சேர்ந்த 18 வயதுடைய வசீகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி டெலிக்கோம் வீதியில் உள்ள சலூனில் கடமையாற்றி வந்த குறித்த இளைஞர் இன்று வழமைபோல கடையில் தனது வேலையைச் செய்து வந்துள்ள நிலையில் பிற்பகல் ஒரு மணியளவில் கடையின் பின்பகுதிக்குச் சென்றுள்ளார். அதிக நேரமாகியும் அவர் திரும்பி வராததையிட்டு அங்கு சென்று பார்த்துள்ளனர் சக ஊழியர்கள். இதன்போது குறித்த இளைஞர் கடையின் கூரையில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
அவர் காதல் பிரச்சினை காரணமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(அம்பாறை நிருபர் சரவணன்)