இடைக்கால அரசமைக்கும் யோசனை ‘அவுட்’ – கட்சி மறுசீரமைப்புக்காக இருகுழுக்களை அமைத்தது சு.க.!
கூட்டரசிலிருந்து முழுமையாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர்கொண்ட அணியால் முன்வைக்கப்பட்ட யோசனையை சு.கவின் மத்தியகுழு உரிய வகையில் கவனத்தில் எடுக்கவில்லை.
“ அதை ஆவணப்படுத்தி வைக்குமாறு ஜனாதிபதி கூறினாரே தவிர, அது குறித்து ஆழமாக ஆராயப்படவில்லை” என்று சு.கவின் மத்தியக்குழு உறுப்பினர் ஒருவர் புதுச்சுடர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று (16) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
மாலை 6 மணிமுதல் 8.45 மணிவரை நடைபெற்ற குறித்த சந்திப்பின் ஆரம்பத்தில், கூட்டரசிலிருந்து வெளியேறுமாறு சு.கவின் 15 பேர்கொண்ட அணியால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் வாசிக்கப்பட்டுள்ளது. அதைதவிர அது குறித்து ஆழமாக பேசப்படவில்லை.
அதன்பின்னர் கட்சிமாநாடு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன. இவ்விரு விவகாரங்களையும் கையாள்வதற்கு இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் ஒரு குழுவும், தயாசிறி ஜயசேகர எம்.பி. தலைமையில் மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு மைத்திரிபக்கமுள்ள 23 உறுப்பினர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.