மூன்றாம்கட்ட சமரை கண்டியில் ஆரம்பிக்கிறார் மஹிந்த – 03 ஆம் திகதி முதல் ஆட்டம் ஆரம்பம்!

தேசிய அரசுக்கு எதிராக அடுத்த மாதம் 03 ஆம் திகதி முதல் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு கூட்டுஎதிரணி இன்று (16) தீர்மானித்துள்ளது.


இதன்படி முதலாவது போராட்டம் 03 ஆம் திகதி கண்டியிலும், இரண்டாவது போராட்டம் 06 ஆம் திகதி அநுராதபுரத்திலும் நடைபெற்ற பின்னர், மாவட்ட ரீதியில் அடுத்தக்கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.


கூட்டுஎதிரணியின் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று (16) இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

மாகாணசபைத் தேர்தல், பொருளாதார நெருக்கடி, இடைக்கால அரசமைக்கும் யோசனை உட்பட மேலும் பல விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தியும், ஐ.தே.க. தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு அரசு தயாராகிவரும் நிலையிலேயே, மஹிந்த அணியும் அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்கொண்டுவந்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மஹிந்த அணி வகுத்த வியூகம் இறுதிநேரத்தில் முறியடிக்கப்பட்டது.

அதன்பின்னரும் பலவழிகளிலும் ஆட்சியைக்கவிழ்க்க கூட்டு எதிரணி முற்பட்டாலும் அவை கைகூடவில்லை.
இந்நிலையிலேயே அரசுக்கு எதிரான மூன்றாம்கட்ட சமரை மஹிந்த கண்டியில் துவங்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *