காலஞ்சென்ற விவசாயிகளுக்கு மட்டக்களப்பில் மரியாதை!

அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, காலஞ்சென்ற விவசாய மக்களைக் கௌரவம் செய்யும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளாமுனை, அரசடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில், இன்று (16) நடைபெற்றது.

ஆயித்தியமலை கமநல சேவைகள் பிரிவின் திட்ட முகாமைத்துவக் குழுச் செயலாளர் எஸ்.பிறைசூடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் கே.சுதாகர், தேசிய உரச் செயலக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன், கமநல சேவைகள் பிரிவின் பெரும்போக உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீட், உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பூஜை வழிபாடுகள் நடைபெற்று, ஆலயத்தின் மண்டபத்தில் கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் இயற்கை எய்திய விவசாயிகளது புகைப்படங்கள் வைக்கப்பட்டு, விசேட வழிபாடுகள் நடைபெற்று, அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலஞ்சென்ற விவசாய மக்களை தேசத்தின் வளமாகக் கருதி, அவர்களுக்குக் கௌரவம் செலுத்தும் வேலைத்திட்டமொன்று, இவ்வருடம் முதல், சகல கமநல சேவைகள் அதிகாரப் பிரதேசங்களிலும் நடத்துவதற்கான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கை கமநல சமூகத்தின் அபிமானத்தைப் பலப்படுத்துவதும் சகல இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் குறிக்கோளாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கமநல வரலாற்றில் முதற்தடவையாக ஆரம்பிக்கப்படும், விவசாயத்தில் ஈடுபட்ட விவசாய மக்கள் ஞாபகார்த்த வேலைத்திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *