ஒலுவில் கடலரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சரைவையின் ஊடாக நடவடிக்கை!
ஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கு உடன் முற்றுப்புள்ளி வைப்பதற்காக அமைச்சரவையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் உறுதியளித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் பிரதி அமைச்சர் கடந்த வாரம் அனுர திஸாநாயக்கவை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் சந்தித்து உரையாடினார்.ஒலுவில் கடலரிப்பால் இதுவரை ஏற்பட்டிருக்கும் சேதங்கள் பற்றியும் எதிர்காலத்தில் மேலும் ஏற்படவுள்ள ஆபத்து பற்றியும் பைசல் காசிம் அணுரவிடம் விளக்கிக் கூறினார்.இ து தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் அனைத்தையும் செயலாளரிடம் ஒப்படைத்தார்.
குறிப்பாக,இந்தக் கடலரிப்புக்குக் காரணமான ஒலுவில் வர்த்தகத் துறைமுகத்தால் இந்த நாட்டுக்கு நன்மைகள் எவையும் ஏற்படப் போவதில்லை என்றும் அதை முற்றாக அகற்றுவதன் மூலமே கடலறிப்புப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை முன்வைக்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் எடுத்துக் கூறினார்.
பிரதி அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அனுர திஸாநாயக்க முதலில் மண்ணை அகழ்வதற்காக மண் அகழ்வு இயந்திரம் ஒன்றை அவசரமாக இறக்குமதி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெறுவதற்காக உடனடியாக அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.