சொந்த வீடு இல்லை! அம்மாவின் அன்பு மட்டுமே மிஞ்சியது!! – பதவி விலகத் தயார் என்கிறார் ஐ.ஜி.பி.

“நான் பதவி துறக்க வேண்டும் என்பதுதான் அனைவரினதும் விருப்பமெனில், அதை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்” என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் இவ்வாரம் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“இலங்கை பொலிஸில் 33 வருடங்கள் பணியாற்றிவிட்டேன். தற்போது போதும் என நினைக்கின்றேன். யாரிடமிருந்தும் எதையும் பெற்றதில்லை. மக்களையும், நல்ல பெயரையுமே உழைத்து வைத்துள்ளேன். இவ்வாறு செயற்படும்போது கல்லடி விழுமானால், பதவியில் இருந்து என்ன பயன்?

அம்மாவின் அன்பும், குடும்ப அரவணைப்புமே எனக்கு எஞ்சியுள்ளது. எனக்கும், பிள்ளைகளுக்கும் வாழ்வதற்கு வீடு இல்லை. இனிமேல்தான் வாடகைக்கு வீடுதேட வேண்டும்” என்றும் கூறினார்.

பொலிஸ்மாஅதிபர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுவருகிறார் என்றும், பொதுவெளியில் அவரின் செயற்பாடுகள் கோமாளிக்குரிய செயற்பாடுகள்போல் உள்ளது என கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியும் பொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகளை அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *