சின்மயி சொல்வதெல்லாம் உண்மை – எனக்கும் ஐவர் தொல்லை!
சின்மயி சொல்லும் பாலியல் புகாரில் உண்மை இருப்பதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் மீ டூ (METOO) இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்தார். இதை அவர் விளம்பரம் தேட கூறுவதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் சின்மயிக்கு திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
தான் சிறுமியாக இருந்தபோது கிட்டத்தட்ட 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் நடத்தும் உன்னை அறிந்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ப்ரொமோ வீடியோவில் இதை தெரிவித்துள்ளார். இதை தெரிவிக்க தான் வெட்கப்படவில்லை என்கிறார் வரு.
சின்மயி சொல்வதெல்லாம் உண்மை. நான் அவருக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று முதலில் சொன்ன நடிகை சமந்தா தான். நடிகர் சித்தார்த் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சின்மயியை மதிப்பதாக ட்வீட் செய்துள்ளார் விஷால்.
அதேவேளை, அனைத்து பெண்களும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும். எங்களுக்காக போராடும் சின்மயியை நினைத்து பெருமையாக உள்ளது. அவரின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்று முன்னாள் பிக் பாஸ் 2 போட்டியாளர் ரம்யா தெரிவித்துள்ளார்.