ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு பலன்தராது – அமெரிக்கா தெரிவிப்பு
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அமெரிக்காாவின் இந்த எச்சரிக்கை இந்தியாவுக்கு மேலும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது.
என்றபோதிலும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. நவம்பர் 4-4 ஆம் திகதிக்கு பிறகும், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான உத்தரவை மத்திய அரசுக்கு சொந்தமான 2 எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு இருப்பதாக அண்மையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருந்தார்.
இதேபோல் ரஷியாவில் இருந்து எஸ்-400 டிரைம்ப் ரக ஏவுகணைகளை வாங்குவதற்கும் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் ரஷியாவிற்கு பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, இந்த ஏவுகணைகணை இந்தியா வாங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹீதர் நயூர்ட் வாஷிங்டன் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. இதையும் மீறி நவம்பர் 4-ந்தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து எந்த நாடும் எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது.
மாறாக இறக்குமதி செய்யப்போகும் நாடுகளைப் பற்றி கேட்கிறீர்கள். இந்த தடை குறித்து உலகம் முழுவதும் எங்களது நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் பேசி வருகிறோம். ஈரான் மீதான எங்களுடைய கொள்கை நிலைப்பாட்டை அந்த நாடுகளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிவித்தும் வருகிறோம்.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரைம்ப் ரக ஏவுகணைகளை வாங்க முடிவு செய்திருப்பது எந்த வகையிலும் இந்தியாவுக்கு பலன் அளிக்காது.
ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் நடவடிக்கை குறித்து நாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை ஜனாதிபதி டிரம்ப் விரைவில் எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.