மாவையின் வாக்குறுதியையடுத்து கைவிடப்பட்டது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒருமாத காலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று சனிக்கிழமை கைவிட்டுள்ளனர்.

தமது விடுதலைக்கான நிபந்தனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் முன்வைத்த தமிழ் அரசியல் கைதிகள், நீராகாரத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த நடைபவனி இன்று அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தது. அங்கு சிறைச்சாலை முன்பாகக் கூடிய மாணவர்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்தார்.

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள 107 தமிழ் அரசியல் கைதிகளையும் தரம் பிரிக்காது விடுவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு விடுவிப்பதற்கு ஏதேனும் தடையாக இருக்குமாயின் குறுகிய கால புனர்வாழ்வுடன் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா எம்.பியிடம் உண்ணாவிரதக் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு கலந்துரையாடவுள்ளது எனவும், இதன்போது தீர்க்கமான முடிவு கிடைக்கும் எனவும், எனவே உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் கூறினார்.

அதனையடுத்து அரசியல் கைதிகளும் தமிழ் மக்களும் விரும்பும் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் வரவு – செலவுத்திட்ட இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா எம்.பியிடம் உண்ணாவிரதக் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கையை மாவை சேனாதிராஜா எம்.பி. ஏற்றுக்கொண்டார் எனவும், அதன் பின்னரே உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் கைவிட்டனர் எனவும் அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *