அரசியல் கைதிகளுக்காக அம்பாறையில் நடைபவனியும் கையெழுத்து வேட்டையும்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அம்பாறையில் இன்று சனிக்கிழமை நடைபவனியும் கையெழுத்து வேட்டையும் நடைபெற்றன.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
திருக்கோயில் ஶ்ரீ வெட்டுக்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் தேங்காய் உடைத்து நடைபவனியை ஆரம்பித்தனர்.
அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியூடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று மக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபைக்கும் மனித உரிமை ஆணையாளருக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் கையெழுத்து வேட்டையொன்றும் முன்னெடுக்கப்பட்டது.