கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் நேர்முகப் பரீட்சை! – இம்ரான் மஹ்ரூப் எம்.பி. தெரிவிப்பு
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை, ஆசிரியர் சேவை 3 -।।க்குள் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை, அடுத்த மாதம் நடைபெறுமென, கல்வி அமைச்சின் கண்காணிப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“கடந்த வருடம் தொண்டர் ஆசிரியர் நியமனத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது. அதன்பின்னர், நியமனத்துக்குத் தகுதியான தொண்டர்களின் விவரங்களை நாம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடம் கோரியிருந்தோம்.
இதற்கமைய கடந்த சில தினங்களுக்கு முன்பே, தொண்டர் ஆசிரியர்களின் விவரங்கள், கிழக்கு மாகாண அமைச்சில் இருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் நான்காம் மாடியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம்,13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறும்.
நேர்முகத் தேர்வுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான கடிதம் தபாலில் அனுப்பிவைக்கப்படும்” – என்றுள்ளது.