மின் கம்பம் நாட்டத் தோண்டிய குழியில் மனித எலும்புக்கூடுகள்! – அச்சுவேலியில் பெரும் பரபரப்பு
யாழ். அச்சுவேலிப் பகுதியில் மின் கம்பம் நாட்டுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அச்சுவேலி, பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பமொன்றை நாட்டுவதற்காக நேற்று நிலத்தைத் தோண்டினர். இதன்போதே நிலத்துக்குள் இருந்து மண்டையோடு, கை, கால்கள் உள்ளிட்ட எலும்புக் கூட்டுப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்தப் பிரதேசத்தில் முன்னர் யுத்தம் நடைபெற்றுள்ளது எனவும், அதன் பின்னர் இப்பகுதி முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.