சிவசேனை அமைப்பின் தலைவரிடம் ரி.ஐ.டி. துருவித்துருவி விசாரணை!
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிவசேனை அமைப்பின் தலைவரை விசாரணைக்காகக் கடந்த மாதம் 05ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தான் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் , அதனால் கொழும்புக்கு வர முடியாது எனவும் கடிதம் மூலம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு அவர் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம், நான்காம் குறுக்கு தெருவில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்திற்கு நேற்று வியாழக்கிழமை மறவன்புலவு சச்சிதானந்தன் அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அலுவலக அதிகாரிகள் துருவித்துருவி விசாரித்து வாக்குமூலங்கள் பெற்ற பின்னர் தன்னை விடுவித்துள்ளதாக சச்சிதானந்தம் தெரிவித்தார்.
பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி தொடர்பாகவே விசாரிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.