இடைக்கால அரசமைக்க சு.கவின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பு – ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்க முடிவு!
இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள் – என்று கூட்டுஎதிரணி எம்.பியான குமார வெல்க தெரிவித்தார்.
அத்துடன், இடைக்கால அரசியல் தான் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை என்றும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து இடைக்கால மேற்பார்வை அரசமைப்பதற்கு கூட்டுஎதிரணி முயற்சித்து வருகின்றமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ சுதந்திரக்கட்சிமீது எனக்கு அக்கறை இருக்கின்றது. அதன் தலைவர்மீது எனக்கு விருப்பமில்லை. எனவே, இடைக்கால அரசமைக்கும் முயற்சிக்கு நான் எதிர்ப்பு. எனினும், அவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்படும்பட்சத்தில் கூட்டுஎதிரணிக்கு ஆதரவாக வாக்களிப்பேன். ஆனாலும், இடைக்கால அரசியல் அமைச்சுப் பதவியை ஏற்கமாட்டேன். எதிரணி பக்கமே அமர்ந்திருப்பேன். மீண்டுமொருமுறை ஏமாறுவதற்கு நான் தயாரில்லை.
தான் எந்தபக்கம் இருக்கின்றாரோ அந்தபக்கமுள்ள தலைவருக்கு வால்பிடிப்பவர்தான் டிலான் பெரேரா. இடைக்கால அரசமைப்பதற்கு மைத்திரி பக்கமுள்ள 23 பேரில் 20 பேர் எதிர்ப்பை வெளியிடுவார்கள். அவர்கள் எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையலாம்” என்றும் கூறினார்.