அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் நல்லாட்சியின் பட்ஜட்டை எதிர்ப்போம்! – சிவசக்தி ஆனந்தன் எம்.பி. எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசு முன்வைக்கும் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்றுச் சந்தித்தார்.

அரசியல் கைதிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருகின்றனர். அது மாத்திரமின்றி அவர்களில் சிலர் ஆறு, ஏழு வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், நல்லாட்சி அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்போம். என்னுடைய இந்த நிலைப்பாட்டிலேயே எனது கட்சியும் செயற்படுகின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *