காணி அபகரிப்பு குறித்து ஆராய வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 17ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம்!

வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி அபகரிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவதுஅமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன், வவுனியாவில் வனவளத் திணைக்களத்தின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்துக் கள விஜயமொன்றை மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து காலநேரத்தைப் பின்னர் அறிவிப்பதாக அன்றைய தினமே அவைத் தலைவர் சபையில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவைத்தலைவரிடம் கேட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியா மாவட்டத்திலுள்ள காஞ்சிரமோட்டைக் கிராமத்துக்குச் செல்வதற்கும் அங்கு மக்கள் மீள்குடியமர்வதற்கும் வன இலாகாவினர் தடையேற்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆகவே, அந்தப் பகுதிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கள விஜயமொன்றை மேற்கொண்டு உண்மை நிலையைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி மாகாண சபையின் உறுப்பினர்கள் யாவரும் அடங்கிய குழு அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு நடவடிக்கைகளைஎடுக்க இருக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *