‘புலி’ புகழ் பாடிய விஜயகலா கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் எனக் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி., குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு தமது சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய வேளையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் விஜயகலா எம்.பி. வெளியிட்ட கருத்து தென்னிலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

அவரை உடனடியாக அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பொது எதிரணியினரான மஹிந்த அணியினர் உள்ளிட்ட சில தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து இராஜாங்க அமைச்சுப் பதவியை தாமாகவே முன்வந்து துறந்தார் விஜயகலா. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியும் இது தொடர்பில் ஆராய விசாரணைக் குழுவொன்றை அமைத்திருந்தது

விஜயகலாவின் உரை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *