இன்றும் அடைமழை தொடரும்! – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு; 8 பேர் பலி
நாட்டில் பெய்துவரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு, மின்னல் தாக்கம் ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடும் மழை காரணமாக, நாட்டில் பல பிரதேசங்களில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது.கேகாலை, களுத்துறை மற்றும் பதுளை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாய எச்சரிக்கையும் இன்னும் தளர்த்திக்கொள்ளப்படவில்லை.
சீரற்ற காலநிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.