அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அச்சுவேலியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலி பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.
குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது தங்களை விரைவில் தம்மை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 14ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் 8 அரசியல் கைதிகளினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது 24 நாட்களைத் தாண்டியும் தொடர்கின்ற நிலையில், தற்போது கண்டி மற்றும் புதிய மகஸின் சிறைகளிலும் உள்ள அரசியல் கைதிகளும் இணைந்து முன்னெடுக்கப்படும் பாரிய போராட்டமாக அது விரிவடைந்துள்ளது.
இந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து அச்சுவேலியில் இன்று ஏற்பாடு செய்துள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களையும், மனிதநேயமுள்ள சமூக செயற்பாட்டாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளன.