இலண்டன் சென்ற வடக்கு ஆளுநருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஈழத்தமிழர்கள்!
இலண்டன் சென்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இனப்படுகொலை அரசின் கோர முகங்களை மறைக்கப் பொது நிகழ்வுகளில் கலந்து மக்கள் மனங்களை மாற்றும் செயற்பாடுகளை செய்துவரும் வடக்கு ஆளுநர் இலங்கைக்கு திரும்ப அனுப்பப்பட வேண்டும் என்று கூறி புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வை.எம்.சி.ஏ. இந்திய மாணவர் விடுதிக்கு எதிரில் நேற்றுப் பிற்பகல் 1:30 தொடக்கம் இரவு 7:00 வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கையில் அந்த விடுதிக்கு ஆளுநர் வருகை தந்தபோது, “இனப்படுகொலை சிங்கள் அரசின் ஆளுநரே இலங்கைக்கு திரும்பிப் போ !” என ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்ரோசமாகக் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து பெருமளவிலான பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
ஆளுநருக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.