ஆயிரம் ரூபாவை முன்னிலைப்படுத்தி கூட்டு ஒப்பந்தத்தின் ஏனைய சரத்துகள் மூடி மறைப்பு! 9 ஆம் திகதியாவது விடிவு கிட்டுமா?
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது.
அடிப்படை சம்பளத்தில் 10 வீத அதிகரிப்பை மாத்திரமே வழங்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்ததாலும், அதை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்ததாலும் முதலாம் சுற்றுப் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையிலேயே இரண்டாம் சுற்று பேச்சு நடைபெறவுள்ளது. இதன்போது இறுதி முடிவு எட்டப்படாவிட்டாலும், அடிப்படைச் சம்பளம் தொடர்பான இறுதி முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில், இம்முறையும் அந்த இலக்கை அடையமுடியாது என்றே கூறப்படுகின்றது.
அதேவேளை, கூட்டுஒப்பந்தத்திலுள்ள சம்பளத்துக்கு புறம்பான சரத்துகள் தொடர்பிலும் இன்னும் கவனம் செலுத்தப்படவில்லை.வறட்சிகால நிவாரணம், நலன்புரி சேவை உள்ளிட்ட விடயங்கள் பல வருடங்கள் கவனத்தில் எடுக்கப்படாதுள்ளன.