சீரற்ற காலநிலையால் 4 பேர் பரிதாபப் பலி! – 8 இலட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று மாலைவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். 8 இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், அரேபியக் கடலில் உருவாகியுள்ள தாழமுக்கத்தால் மழையுடனான காலநிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. ஆயிரத்து 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் நாள்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் பல பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் அடைமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் மழை காரணமாக பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *