தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில் களமிறங்குகின்றது கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இவ்வாரம் கொழும்பில் மாபெரும் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் ‘புதுச்சுடர்’ இணையத்தளத்துக்கு அவர் மேலும் கூறுகையில்,
“சிறையிலுள்ள 65 தமிழ் அரசியல் கைதிகள், தங்களது விடுதலையை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் 12 தமிழ் அரசியல் கைதிகளும், வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் 43 தமிழ் அரசியல் கைதிகளும், கண்டி தும்பர சிறைச்சாலையில் 10 பேருமாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அரசு எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது.
இவ்வாறு அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு மௌனம் சாதித்து வருமானால் சர்வதேச சமூகத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் இவ்வாரம் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுளோம்” – என்றார்.