மஹிந்தவை பிரதமராக்கி இடைக்கால அரசமைக்க கூட்டமைப்பின் உதவியை நாடுகின்றது ‘குறூப் – 15’
வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடித்துவிட்டு, இடைக்கால அரசை அமைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் கோரப்படும் என்றும், அக்கட்சியுடன் இது குறித்து விரைவில் பேச்சு நடத்தப்படும் என்றும் எஸ்.பி. திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
கூட்டரசிலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணியால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“கூட்டரசின் வரவு – செலவுத்திட்டம் விரைவில் முன்வைக்கப்படவுள்ளது. இறுதி வாக்கெடுப்பின்போது அதைத் தோற்கடிப்பதே எமது நோக்கமாக இருக்கின்றது. இதற்கான ஆதரவை த் திரட்டுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்களுடனும் பேச்சு நடத்தி வருகின்றோம்.
நாடு இன்று படுபயங்கரமான பாதையில் பயணிக்கின்றது. அதை நல்வழிப்படுத்துவதற்குரிய ஆற்றல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடையாது. எனவே, அவரை வீட்டுக்கு அனுப்புவதே சிறந்த மாற்றுவழியாக இருக்கின்றது.
அதன்பின்னர் மஹிந்த தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்படும். இதை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் மேலும் பேச்சுகள் இடம்பெறும்” என்றார்.
அதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் 15 பேர் கொண்ட அணி அண்மையில் பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.