பட்ஜட்டுக்கான ஆதரவை பரிசீலிக்குமாம் கூட்டமைப்பு!
அரசியல் தீர்வை வழங்குவதாக இந்த அரசு உறுதியளித்ததன் காரணமாகவே 2018ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது. எனினும் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அதனை ஆதரிப்பதா? இல்லையா? என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கும் என நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பிரேரணை சமர்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தேர்தல்
உரிய காலத்தில் நடத்தப்படவேண்டும் எனக் கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. தற்போதும் இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடனான சந்திப்புக்களின் போதும் வலியுறுத்தி வருகின்றோம்.
பொது எதிரணி தமிழர்களுக்கும் கூட்டமைப்புக்கும் எதிராகவே செயற்படும். பொது எதிரணியினர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இனவாதம் பேசியே பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டனர். தற்போதும் அதையே செய்து வருகின்றனர்.
எனவே அவர்கள் கூட்டமைப்பை விமர்சிப்பதையோ, கருத்து வெளியிடுவதையோ நாம் கவனத்தில் கொள்வதில்லை” – என்றார்.