அவசர நாடாளுமன்ற அமர்வு: மஹிந்த அணியின் கோரிக்கை நிராகரிப்பு! – திங்களன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பு
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் எதிர்வரும் திங்களன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இதில் கட்டாயம் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரமுகர்கள் கொலைச் சதி, பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு, பொருளாதார நெருக்கடி உட்பட மேலும் பல விவகாரங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்குரிய திகதியை நிர்ணயிப்பதற்காகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்துக்குரிய முதல் வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனினும், அதற்கு முன்னர் அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பொது எதிரணி கோரிக்கை விடுத்தது. காரணங்களை பட்டிலிட்டுக் காட்டி பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன, சபாநாகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் பிரகாரம், நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுவதற்குரிய அதிகாரம் பிரதமருக்கே இருக்கின்றது. அந்த அடிப்படையில் பொது எதிரணியின் கோரிக்கை நிராகரிக்கட்டதாகவே அறியமுடிகின்றது.