மட்டு. – கோட்டை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு!
மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவிருந்த மறியல் போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழ் உணவாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – கோட்டை மறியல் போராட்டமாக இப்போராட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெறவிருந்தது.
செப்டெம்பர் 29ஆம் திகதி, மட்டக்களப்பு – திருகோணமலை வீதியினூடாகப் பயணித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் இராமநாதன் அங்கஜன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பயணித்த வாகனத் தொடரணியை வழிமறித்த தமிழ் உணர்வாளர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் மஹிந்த அமரவீர, தான் கொழும்பு சென்று ஜனாதிபதியைச் சந்தித்து இவ்விடயம் சார்பாக உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறியிருந்தார்.
அதன்பின்னர், தமிழ் உணர்வாளர்களிடம் தொடர்பை ஏற்படுத்திய அமைச்சர், தனக்கு சில நாட்கள் கால அவகாசம் வழங்கும் படியும் கேட்டுக் கொண்டதற்கமைய, இப்போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தமிழ் உணர்வாளர்களின் தலைமையகம் அறிவித்துள்ளது.