ஒலுவில் கடலரிப்பைத் தடுப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்! – பைசல் காசிமிடம் ஜனாதிபதி வாக்குறுதி
ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் பைசல் காசீம் மேற்படி பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இந்தக் கடலரிப்புக்கான காரணத்தையும், இந்தக் கடலரிப்பை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும், இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றியும் பிரதி அமைச்சர் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துக்கூறினார்.
அத்தோடு,ஏற்கனவே ஜனாதிபதியைச் சந்தித்து இந்தப் பிரச்சினையை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தமையையும் இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி குழு ஒன்றை நியமித்தமையையும் பைசல் காசீம் ஞாபகமூட்டினார்.
இந்தப் பிரச்சினையால் பல ஊர்களும் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாகத் தீர்வை முன்வைக்குமாறு பிரதி அமைச்சர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக உடனடியாகக் குழுவொன்று அமைக்கப்படும் என்றும் அதன் பின் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று முன்வைக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.