காதலுக்காக கடத்தல் நாடகமாடிய யுவதி கைது! நள்ளிரவில் சினிமாப்பாணியில் வகுப்பட்ட திட்டம் அம்பலம்
அம்பலாந்தோட்டை, வலவ்வத்த பகுதியில் இரவுவேளையில் வீடொன்றுக்குள் ஆயுதங்கள் சகிதம் புகுழந்த குழுவொன்றால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 17 வயதுடைய யுவதி இன்று மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியின் காதலனே இதன்பின்னணியில் செயற்பட்டுள்ளார் என்று குடும்ப உறவினர்கள் முன்வைத்த முறைப்பாட்டையடுத்து, தங்காலை குற்ற விசாரணைப் பிரிவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதற்காக விசேட பொலிஸ் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இதன்படி இன்று மாலை 5 மணியளவில் குறித்த யுவதியையும், அவரது காதலன் என சந்தேகிக்கப்படும் இளைஞரையும் பொலிஸார் – திஸ்ஸமகாராம பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து மடக்கிப்பிடித்தனர்.
இதையடுத்து இருவரிடமும் பலகோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின் முடிவில் கடத்தலுக்குரிய திட்டத்தை யுவதியே வகுத்துகொடுத்துள்ளார் என்றும், அவரின் விரும்பத்தின்பேரிலேயே அது நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்ல தாயின் தொலைபேசியிலிருந்து அழைப்பை ஏற்படுத்தியே கடத்தல்காரர்கள்போல் நடித்தவர்களை யுவதி வீட்டுக்கு அழைத்துள்ளார் என்றும், காதலை மையப்படுத்தியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
தங்காலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.