வெள்ளியன்று மன்னார் செல்கின்றார் ஜனாதிபதி!
தேசிய சுற்றாடல் தின நிகழ்வு இம்முறை மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய சுற்றாடல் தின நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேசிய ரீதியில் மன்னாரில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலகமும், ஜனாதிபதி செயலகமும் இணைந்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எதிர்வரும் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னாருக்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னார் – மதவாச்சி பிரதான வீதி தம்பனைக்குளம் பகுதியில் முதலில் மரம் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து தேசிய சுற்றாடல் தின நிகழ்வு இடம் பெறும் மன்னார் நகரசபை மைதானத்துக்கு வருகை தருவார்.
இந்த நிகழ்வுகளுக்கான அனைத்து விதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” – என்றார்.