பட்ஜட்டைத் தோற்கடிக்க மஹிந்த அணி வியூகம்! – கொழும்பில் முகாமிட்டு பேச்சு

தேசிய பாதுகாப்பு, பொருளாதார நெருக்கடி, பிரமுகரகள் கொலை சூழ்ச்சி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இதன்படி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு மஹிந்தவின் இல்லத்தில் பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு சமகால அரசியல் நிலைவரங்கள் சம்பந்தமாக அலசி ஆராயவுள்ளனர்.

குறிப்பாக வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதன் மூலம் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவது குறித்தும், இதற்காக மைத்திரி அணியின் ஆதரவைப் பெறுவது தொடர்பிலும் இதன்போது திட்டம் வகுக்கப்படலாம் என பொது எதிரணி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டு அதன் மீது டிசம்பர் 8ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மேற்படி கூட்டம் முடிவடைந்த பின்னர் பொது எதிரணியின் எம்.பிக்களையும் மஹிந்த சந்திக்கவுள்ளார்.

தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்டவர்கள் இன்றைய சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *