நாமல் குமாரவை கைதுசெய்க! சி.ஐ.டியில் முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு
பிரமுகர்கள் கொலைசூழ்ச்சியை அம்பலப்படுத்தியுள்ள நாமல்குமாரவை உடனடியாக கைதுசெய்யுமாறுகோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சி.ஐ.டியில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.
மு.காவின் பிரதித் தலைவரும், பிரதியமைச்சருமான எம்.எச்.எம். ஹரீஸாலேயே இம்முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தி கொரில்லா தாக்குதலை நடத்துமாறும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரை கொலை செய்யுமாறும் பிரான்ஸிலிருந்து நாமல் குமாரவுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு – அதற்குரிய நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயங்களை நாமல்குமாரவே அண்மையில் ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது அம்பலப்படுத்தியதுடன், பிரதான சூத்திரதாரியின் குரல்பதிவையும் வெளியிட்டார்.
ஜனாதபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி திட்டம் தீட்டப்பட்டதாகவும் நாமல்குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நாமல்குமாரவை கைதுசெய்து – விசாரணை நடத்துமாறு மு.காவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.