வடக்கில் வன்முறைக் குழுக்களை ஒழிக்க இராணுவத்தினருக்கு அதிகாரம் தாருங்கள்! – அரசிடம் தளபதி அவசர கோரிக்கை
வடக்கில் இயங்கும் சட்டவிரோதக்குழுக்களை ஒழிப்பதற்கு குறுகிய காலப்பகுதிக்காவது இராணுவத்துக்கு அரசு அதிகாரத்தை வழங்கினால் அதை இலகுவில் செய்யக்கூடியதாக இருக்கும் என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
யாழ் குடாநாட்டில் ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடக்குவதற்குப் பொலிஸார், இராணுவத்தின் உதவியைக் கோரும் பட்சத்தில் – 48 மணி நேரத்துக்குள் அந்தக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்று யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் வினவியபோது அதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி,
“நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. தேசிய பாதுகாப்பு என வரும்போது அதில் இராணுவத்துக்கு முக்கிய வகிபாகம் இருக்கின்றது. வடக்கில் மட்டுமல்ல ஏனைய பகுதிகளிலும் சட்டவிரோதக் குழுக்கள் செயற்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
எது எப்படியோ யாழ். கட்டளைத் தளபதியின் கருத்தில் உண்மை இருக்கின்றது. எனவே, குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்காவது இராணுவத்துக்கு சில அதிகாரங்கள் வழங்கப்படுமானால் அப்பணியை இராணுவத்தால் செய்யமுடியும். இந்த விடயத்தில் அரசு விரைந்து முடிவெடுக்கவேண்டும்” – என்றார்.