அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் உறவுகள் போராட்டம்!
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரததில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக மழைக்கு மத்தியிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்திச் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைதிகளுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் அனைவரையும் விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இன்று சனிக்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.