மைத்திரி, மஹிந்த கொலைச் சதி: தெற்கு அரசியலில் கொந்தளிப்பு! – இந்தியப் பிரஜைக்கான நிதியுதவி குறித்து பலகோணங்களில் சி.ஐ.டி. விசாரணை
சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை, இலங்கையில் ‘பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி’ குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலைசெய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தனக்குத் தெரியும் என சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார் என நேற்றுமுன்தினம் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் களுத்துறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து வெளியிட்டார்.
“மேசில் தோமஸ் என்ற இந்தியப் பிரஜையே சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். 2017ஆம் ஆண்டு இலங்கை வந்துள்ள இவர் பல பகுதிகளிலும் வசித்துள்ளார். இவருக்கான நிதி எவ்வாறு கிடைத்தது என்பதை இன்னும் கண்டறிய முடியாமலுள்ளது. அது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.
பிரமுகர்கள் கொலைச் சூழ்ச்சி குறித்து அவர் புதிதாக எவ்வித தகவலையும் வெளிப்படுத்தவில்லை. நாமல் குமாரவுடனான உரையாடலை மையப்படுத்தியே – அவரால் உச்சரிக்கப்பட்டுள்ள பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்” என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.