முக்கிய பிரமுகர்களுக்கு கொலை அச்சுறுத்தல்: விசேட விவாதம் கோருகின்றது பொது எதிரணி
நாட்டின் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதுடன், முக்கிய தலைவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆகியவைத் தொடர்பில் விசேட விவாதம் ஒன்றை நடத்துவதற்கு, அடுத்தவாரம் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு தெரிவித்து, சபாநாயகர் கருஜயசூரியவிடம் பொது எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தாமை பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் எனத் தெரிவித்து, இந்தக் கோரிக்கையை சபாநாயகரிடம் நேற்று முன்வைத்ததாக, பொது எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது குறித்து, பொது எதிரணி கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும், நாடாளுமன்றத்தை கூட்டி ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.