பிரதமர், சட்டமா அதிபர் முன் சம்பந்தன் ஆவேசம்! – அரசியல் கைதிகள் விடுதலையைத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்து
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே முக்கிய பேச்சு இடம்பெற்றது.
பிற்பகல் 3 மணியிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்தப் பேச்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தாமதமடைந்து வருகின்றமை தொடர்பில் இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடும் அதிருப்தியைத் தெரிவித்தார்.
“உங்களின் செயற்பாடுகள் தாமதமடைந்து வருகின்றமையால் உண்ணாவிரதக் கைதிகளுக்கு என்ன பதிலை நாம் சொல்வது?” என்று சட்டமா அதிபர் மீது சம்பந்தன் சீறிப்பாய்ந்துள்ளார்.
கூட்டமைப்பின் தலைவரின் ஆவேசத்தையடுத்து இந்தச் சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடர் அமர்வில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிவுடன் மேற்படி தீர்மானங்கள் அவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவ எனத் தெரியவருகின்றது.