படையினரை போற்றி ஜனாதிபதி ஆற்றிய உரை சிறந்த பதிலடி! சு.க. பெருமிதம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கின்றார் என விமர்சிப்பவர்களுக்கு அவரின் ஐ.நா. உரையானது சிறந்த பதிலடியாகும் – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
“ கொடூரமான தீவிரவாத அமைப்பை தோற்கடித்து நாட்டைப்பாதுகாத்த படையினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நாவில் நினைவுகூர்ந்ததுடன், படையினருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் ஜனாதிபதி தெரிவித்துக்கொண்டார். இது பெருமைக்குரிய விடயமாகும்.
அதுமட்டுல்ல இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடவேண்டாம் என்றும், வெளிநாட்டு தலையீடுகளை இலங்கை ஏற்காது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
நாட்டையும், படையினரையும் ஜனாதிபதி காட்டிக்கொடுக்கின்றார் என சிலர் விமர்சிக்கின்றனர். ஜனாதிபதியின் ஐ.நா.உரையானது இவர்களுக்கான சிறந்த பதிலடியாக அமையும்” என்றார்.