தமிழுக்கு இடமில்லையேல் அரச நிகழ்வுகளைப் புறக்கணிப்போம்! தமிழ் எம்.பிக்கள் அதிரடி முடிவு

அரச வைபவங்களில் தமிழ் மொழியினை புறக்கணிக்கும் வகையிலும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தாமலிருக்கும் நிலைமையும் தொடருமேயானால், அவ் வைபவங்களைப் புறக்கணிப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள்  தீர்மானித்துள்ளனர்.


அரச திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் ஆகியவற்றுக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்படும் அழைப்பிதழ்களில் தமிழ்மொழி புறக்கணிப்புக்கள் மற்றும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் புறக்கணிப்புக்கள் இடம்பெற்று வருவதாலேயே, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி, பதுளைப் பகுதியின் ஊவா – பரணகமையில் நிருமாணிக்கப்பட்ட “சத்திருகம” என்ற வீடமைப்புத் திட்டத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு, தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வின் அழைப்பிதழ்களில் பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் மற்றும் நிழல்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான அ. அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ் ஆகியோரது படங்கள் மற்றும் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அ. அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ் ஆகியோர் இருவரும், மேற்படி நிகழ்வினையே புறக்கணித்தனர்.

தொடர்ந்தும் இந்நிலை நீடிக்குமானால், மலையக மக்களின் தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றோம். தமிழ் மொழி புறக்கணிப்புக்கள் மற்றும் அரச நிகழ்வுகளில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்தல் போன்ற விடயங்களை எம்மால் அனுமதிக்க முடியாதென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *