‘பிரமுகர் கொலை சூழ்ச்சி’யை அம்பலப்படுத்திய நாமல் குமாரவின் வீட்டுக்கு இந்தியப் பிரஜை சென்றது ஏன்?
“ என்னிடம் மேலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. தேவையேற்படின் அவற்றையும் அம்பலப்படுத்துவேன்” என்று நாமல் குமார இன்று அறிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாப ராஜபக் ஷவையும் கொலைசெய்வதற்கு சூழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும், இதன் பின்னணியில் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மாஅதிபர் நாலக டி சில்வா செயற்படுகின்றார் என்றும் தகவல் வெளியிட்டிருந்த நாமல் குமார இன்றும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
நாமல்குமாரவுக்கும், நாலக டி சில்வாவுக்கு இடையில் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடல் தொடர்பில் குரல்பதிவு பிரதியினை இனங்காண்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துவெளியிட்ட நாமல்குமார,
“ என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை தற்போதே வெளியிடமுடியாது. எப்படி எதிர்நீச்சல்போடுவதென்பது பொலிஸாருக்கு நன்கு தெரியும்” என்றார்.
அதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப்பிரஜை குறித்து எழுப்பட்ட கேள்விக்கு,
“ இந்தியப் பிரஜையொருவர் எனது வீட்டுக்குவந்து – எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறினார். அவரின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்தே பொலிஸ் நிலையத்தில் முறையிட்டேன்” என்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தனக்குத் தெரியும் என, கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.