தும்பு முட்டாசினால் விரிவுரையாளரானவள்!
தும்பு முட்டாசினால் விரிவுரையாளரானவள்!
தந்தை விற்ற தும்புமுட்டாசு
தரமாக்கியது உன்கல்வியை
அம்மாவின் கூலிவேலை
அபிவிருத்தியாக்கியது உன்மூளையை
உன் வீட்டோரம் இருப்பது
காட்டோரம்
அதிலிருந்து முன்னேறினாய்
கல்வியின் கரையோரம்
கற்குளம் தன்னிலே முதல்
பல்கலைக்குளம் நீந்தியள்
கஸ்ரத்தின் குளமிருந்து
கல்விக்குளம் இறங்கியவள்
கடல்போல துன்பங்களை
கண்டுமே அதிரா நீ
கடல்நடுவே அமிழ்ந்ததென்ன?
உடல் தன்னும்
கறுப்பானதென்ன?
கிராமத்திலிருந்து எழுந்த
கீற்றே!
கிழக்கிலே வற்றிப்போன
ஊற்றே!
வடக்கின் வசந்தமொன்று
கிழக்கிலே வாடியதேனோ?
அடிப்படை வசதியிலா ஊரிருந்து
அறிவுப்படை ஆகியிருக்கிறாய்.
அம்மா அப்பா வியர்வையால்தான்
அந்தஸ்தும் அடைந்திருக்கிறாய்.
உன்னாலே வெளிச்சம்வருமென
ஊர் எதிர்பார்த்தது.
உந்தன்முக இருள்கண்டு
ஊரே இருளானது.
விரிவுரை கொடுத்தவுனைப் பற்றி
விளக்கவுரை ஏராளம் உலவுதே.
கடைசி உன்கணம்
கடலுக்கும்
உன் உடலுக்குமே வெளிச்சம்.
உன்மரணம்
ஏதோ சொல்லிப்போகிறது.
ஏற்காத செவிகள்
எங்கோ தள்ளிப்போகிறது.
– யோ.புரட்சி.
(காணாமல்போன நிலையில் கடந்த 22ஆம் திகதி திருகோணமலைக் கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழத்தின் திருகோணமலை வளாகத்தின் ஆங்கிலப் பாட விரிவுரையாளர் நடராசா போதநாயகியின் நினைவாக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது.)