29இல் ஸ்கொட்லாந்து பறக்கிறார் பூஜித!
பொது எதிரணி உறுப்பினர்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, விசேட பயிற்சியொன்றுக்காக எதிர்வரும் 29ஆம் திகதி ஸ்கொட்லாந்து செல்லவுள்ளார்.
சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின்பண்டார, அமைச்சின் செயலாளர் ஆகியோரும் குறித்த பயிற்சிக்காக அங்கு செல்லவுள்ளனர்.
பொது இடத்தில் நடனமாடியமை, பௌத்த பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டமை, பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தப் பின்வாங்கியமை உட்பட மேலும் பல காரணங்களால் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவரை உடனடியாக பதவி விலக்குமாறு மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சு விசேட குழுவொன்றின் ஊடாக உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.