தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து வெகுஜன அமைப்புக்கள் என்ற அடிப்படையில் ஏற்பாடு செய்த இப்போராட்டம் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணிவரை நடைபெற்றது.

அநுராதபுரம் சிறையிலுள்ள 9 தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை தொடர்ச்சியாக இத்தகைய போராட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்கவுள்ளனர் எனவும் மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *