திலீபனின் நினைவு நாளன்று வேறு நிகழ்வுகளுக்குத்தடை! – யாழ். மாநகர சபையில் தீர்மானம்
தியாக தீபம் திலீபனின் நினைவு இறுதி நாளன்று யாழ். மாநகர சபை எல்லைக்குள் வேறெந்த நிகழ்வையும் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பான மாநகர சபையின் விசேட கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
“திலீபன் நினைவேந்தலை ஒழுங்குபடுத்தும் அதேவேளை, அன்றைய தினம் மாநகர சபை எல்லையினுள் நிகழ்வொன்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்” கூட்டத்தில் உறுப்பினர் ஒருவரால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் நிறைவில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய சுற்றுலா தின நிகழ்வுக்காக யாழ். மாநகர சபை மைதானத்தை வழங்குவதில்லை என்று கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஏகமனதாகத் தீர்மானித்தனர்.
இந்தத் தீர்மானத்தை வடக்கு மாகாணச் சுற்றுலாத்துறைச் செயலணியின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது.