அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் நாளை அடையாள உண்ணாவிரதப் போர்!
உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளன.
புதிய மாக்சிஸ லெனிசக் கட்சி,சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, காணாமல்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் ஆகியன இணைந்தே மேற்படி அழைப்பை விடுத்துள்ளன.
இந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் இது தொடர்பில் தெரிவித்தவை வருமாறு:-
“அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களில் இருவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும்.
இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சி, இன,மத,பிரதேச பேதமின்றி அனைத்துத் தரப்பினரையும் பங்குபெறுமாறு அழைக்கிறோம்” – என்றனர்.