யாழில் இராணுவத்தினரிடம் இன்னும் 2,880 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாம்!
“யாழ்.மாவட்டத்தில் இராணுவத்திடம் 2,880 ஏக்கர் காணிகள் மட்டுமே உள்ளன. இந்தக் காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படும். இந்தக் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கான பணத்தை அரசு எமக்கு வழங்கவில்லை. அந்தப் பணம் வழங்கப்பட்டால் காணிகள் விடுவிக்கப்படும்.”
– இவ்வாறு தெரிவித்தார் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி.
பலாலி இராணுவ தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2009ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் 25 ஆயிரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. இந்த நிலத்தில் 88.80 வீதமானவை மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளன. இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்தமாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. இது யாழ். மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமாகும்.
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் மட்டும் பலாலி விமான நிலையம் மற்றும் விமானப் படையின் கீழ் உள்ள 996.74 ஏக்கர் நிலமும், இராணுவத்திடம் உள்ள 2032.19 ஏக்கர் நிலமும் சேர்த்து 3028.93 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது” – என்றார்.