பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்! – சட்டம், ஒழுங்கு அமைச்சு தெரிவிப்பு

“பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி நீக்குமாறு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கு எவ்வித அறிவித்தலையும் இன்னும் விடுக்கவில்லை. எனினும், பொலிஸ்மா அதிபருக்கு எதிராக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக அமைச்சு மட்டத்திலான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.”

– இவ்வாறு சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது, இரு வாரங்களுக்குள் பதவி துறக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பணிப்புரை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதா என்று கனக ஹேரத் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார,

“இது குறித்து அமைச்சுக்கோ அல்லது பொலிஸ் ஆணைக்குழுவுக்கோ எதுவும் அறிவிக்கப்படவில்லை. தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி வாயிலாக அறிவித்தார்களா என்பது பற்றி எனக்குத் தெரியாது. பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கும், நீக்குவதற்கும் சில நெறிமுறைகள் இருக்கின்றன. அதன்படியே நடவடிக்கை இடம்பெறவேண்டும்.

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக அமைச்சு மட்டத்திலான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *