யாழ். மாநகர சபை ஏற்பாட்டில் திலீபனின் இறுதிநாள் நினைவு! – மேயர் ஆர்னோல்ட் அறிவிப்பு
தியாக தீபம் தீலிபனின் நினைவு நாள் இறுதி நிகழ்வுகள் எந்தவித கட்சி பேதங்களுமின்றி யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் என்றும், அதற்கு அனைத்துத் தரப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் யாழ். மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
திலீபனின் நினைவு நாள் நிகழ்வின்போது கட்சிகளுக்கிடையே குழப்பங்கள் ஏற்பட்டிருந்த நிலையிலேயே யாழ்.மாநகர மேயர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“செப்டெம்பர் 26ஆம் திகதி 1987ஆம் ஆண்டு எமக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணத்தை நிகழ்த்தி, எமது மக்களின் விடுதலைக்காக அஹிம்சை ரீதியான தனது போராட்டத்தில் 23ஆம் வயதில் இன்னுயிரை நீத்தார் அண்ணன் திலீபன்.
அன்று முதல் அஹிம்சை மூர்த்தியாக எமது மக்கள் எமது அண்ணனை ‘தியாக தீபம் லெப். கேணல் திலீபன்’ என்று மகுடம் சூட்டி இற்றைவரை நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.
இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் எவ்விதமான பேதங்களும் முரண்பாடுகளுமற்று தியாக தீபம் தியாகி திலீபனைக் கௌரவத்தோடு நோக்குவதும் அவரது மகோன்னத தியாகத்தை மரியாதையோடு நினைவுகூர்வதும் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்ற ஒரு நிகழ்வாக இருக்கின்றது.
தியாகி திலீபன் தனது மக்களின் விடுதலைக்காக தனது அஹிம்சை ரீதியான போராட்டத்தை நிகழ்த்திய நல்லூர் மண்ணும், அவர் தனது உயிரை தனது மக்களுக்காக ஆகுதியாக்கிய மண்ணும் யாழ். மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கின்ற காரணத்தால் அன்று முதல் இன்றுவரை யாழ். மாநகர சபை தியாகி திலீபனைக் கௌரவப்படுத்துவதிலும், அவருக்கான நினைவாலயம் அமைப்பதிலும், வருடாவருடம் அவரை நினைவு கூர்வதையும் தனது பொறுப்பிலேயே நிகழ்த்தி வருகின்றது.
தியாகி திலீபன் தமிழ்பேசும் மக்களுக்கானவர் மாத்திரமல்லர், அவர் அஹிம்சை ரீதியாகப் போராடுகின்ற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரியவர். அவர் ஒரு கட்சிக்கோ ஓர் இனத்திற்கோ உரியவர் அல்லர். மாறாக விடுதலை வேண்டிய அனைவருக்குமானவர்.
தேசியத் தலைவர் தியாக தீபம் திலீபனைத் தனது மகன் என்று விழித்துப் பேசியிருக்கின்றார். தனது போராட்டம் தமிழ் பேசும் மக்களுக்கானது என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார். இவ்வாறான ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் வழி வந்த ஒரு தியாகியை நினைவுகூர்வதில் எவ்வித பேதங்களும் பாராட்டப்படக்கூடாது.
எல்லாவிதமான முரண்பாடுகளையும் களைந்து தமிழ் பேசும் மக்களாக எதிர்வரும் 2018 செப்டெம்பர் 26ஆம் திகதி தியாகி திலீபனின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ். மாநகர சபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறும். அனைவரையும் ஒற்றுமையாக இறுதிநாள் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு யாழ் மாநகர சபை சார்பில் நான் அழைப்பு விடுக்கின்றேன்.
இந்த நிகழ்வுக்கு மேலதிகமாக அந்த நினைவிடத்தைச் சூழ வேறு நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறும் அனைத்துத் தரப்பினரையும் முன்கூட்டியே நான் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
அவர் உண்ணாவிரதமிருந்த இடத்தில் அகவணக்க நிகழ்வுகள் இடம்பெற்று பொதுச்சுடரேற்றல், ஈகச் சுடரேற்றல், மலரஞ்சலி செலுத்துதல் நிகழ்வுகள் அனைத்தும் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறும்.
எமது போராட்டத்தை நேசிக்கும், எமது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களின் பங்குபற்றுதலோடு சிறப்புற இடம்பெறஅனைவரையும் ஒத்துழைக்குமாறு மீண்டுமொரு தடவை வலியுறுத்த விரும்புகின்றேன்” – என்றுள்ளது.