மைத்திரி தலைமையில் இன்றிரவு கூடுகின்றது சு.கவின் மத்திய குழு!
பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டரசிலிருந்து வெளியேறியுள்ள சு.கவின் 16 பேர் கொண்ட அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பங்கேற்கமாட்டார்கள் எனத் தெரியவருகின்றது.
16 பேர் கொண்ட அணியில் தயாசிறி ஜயசேகர ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்தாலும் தற்போது ஜனாதிபதியுடன் அவர் நெருங்கிய தொடர்பைப் பேணுவதால் அக்குழுவின் செயற்பாடுகளில் அவர் பங்கேற்பதில்லை. இதனால், குழு 15 என்றே அவ்வணி அடையாளப்படுத்தப்படுகின்றது. எனவே, இன்றைய கூட்டத்தில் தயாசிறி ஜயசேகர பங்கேற்பார்.
கட்சி மறுசீரமைப்புப் பணி, கட்சியின் வருடாந்த சம்மேளனக் கூட்டம், ஜனாதிபதியின் ஐ.நா. உரை, கொலை அச்சுறுத்தல் விவகாரம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன.