இராணுவம் அடாவடி! மக்கள் கொந்தளிப்பு!! – கிளிநொச்சியில் பெரும் பதற்றம்
கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களின் குடிசைகளை அகற்றியதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதி அண்மையில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், காணியின் உரிமையாளர்கள் அங்கு மீள்குடியேறியிருந்தனர். அதில் தற்காலிக கொட்டில்களை அமைத்து அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மக்களின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மக்களின் குடிசைகளைப் பலவந்தமாக அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டனர். இதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சாந்தபுரம் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியை மீண்டும் அவர்கள் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.